ஐபிஎல் 2025: சாம் கரண் அதிரடி; சஹால் ஹாட்ரிக் - பஞ்சாப் கிங்ஸுக்கு 191 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஷேக் ரஷீத் மற்றும் ஆயூஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் ஷேக் ரஷீத் 11 ரன்னிலும், ஆயூஷ் மத்ரே 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் நடப்பு ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 88 ரன்களைக் குவித்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்னிலும், அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அஹ்மாத் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளிலும் விக்கெட்டை இழக்க, யுஸ்வேந்திர சஹால் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்தார்.
இறுதியில் ஷிவம் தூபேவும் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மர்க்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now