
வரும் 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலம் இன்று (ஜூன் 12) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் போன்றவற்றுக்கான இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்கப்படும்.
2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 410 ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கான ஒளிபரப்பு உரிமை ஏலம் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா, இந்திய துணைக்கண்டத்திற்கான டிவி ஒளிபரப்பு (பேக்கேஜ் ‘ஏ’– ஒரு போட்டிக்கு ரூ. 49 கோடி), இந்திய துணைக்கண்டத்திற்கான டிஜிட்டல் உரிமம் (பேக்கேஜ் ‘பி’– ஒரு போட்டிக்கு ரூ.33 கோடி), ஒவ்வொரு சீசனிலும் தேர்வு செய்யப்பட்ட 18 போட்டிகளின் டிஜிட்டல் உரிமம் (பேக்கேஜ் ‘சி’– ஒரு போட்டிக்கு ரூ.11 கோடி), அன்னிய நாடுகளில் ஒளிபரப்பு உரிமம் (பேக்கேஜ் ‘டி’– ஒரு போட்டிக்கு ரூ.3 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.