
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சாரா ஃபோர்ப்ஸ் 2 ரன்களிலும், கூல்டர் ரெய்லி 24 ரன்களிலும், கேப்டன் ஓர்லா 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இணைந்த ஏமி ஹண்டர் - லியா பால் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஏமி ஹண்டர் அரைசதம் கடந்த நிலையில் 66 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் லியா பாலுடன் இணைந்த ரெபேக்கா ஸ்டோகெலும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தாங்கள் அரைசதத்தை கடந்த அசத்தியதுடன் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த லியா பால் 81 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரெபேக்கா ஸ்டோகெல் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி, அச்சினி குலசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.