
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு கேபி லூயிஸ் - ஏமி ஹண்டர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஏமி ஹண்டர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினாலும், அடுத்து களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தினார். அதேசமயம் மறுமுனையில் கேபில் லூயிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ் 4 பவுண்டரிகள்டன் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேபி லூயிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 119 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் அச்சினி குலசூரிய, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.