
இந்திய அணியைச் சேர்ந்த 23 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அதன்படி இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை என்றாலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சமீபத்தில் அறிமுகமாகி தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்றுடன் நடைபெற்ற முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி 7 விக்கெட்டை வீழ்த்தியதோடு ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக அவர் எக்கானமியை மெயின்டைன் செய்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், குறைந்த அளவே ரன்களை விட்டுக் கொடுப்பதனாலும் இவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வரும் வேளையில் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டிக்கு பின்னர் தொடர் நாயகன் விருதினை பெற்ற அவர் தனது சிறப்பான செயல்பாட்டிற்கு என்ன காரணம் என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.