
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியானது, நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரை தற்போது இந்திய அணியுடன் சமன் செய்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவிருக்கும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 169 ரன்களை குவிக்க 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடரில் 200 ரன்களைக் கூட எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் எந்த ஒரு கட்டத்திலும் கொஞ்சம் கூட முன்னிலை பெறாமல் 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் காரணமாக தற்போது இந்த தொடரானது சமநிலை அடைந்துள்ளது.