
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எழுச்சி பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த அணி சமீபத்தில் பங்கேற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதுடன் அரையிறுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளது.
இருப்பினும் இதுவரை ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத நிலை தொடர்கிறது. இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளதால், அதில் சாம்பியன் பட்டத்தை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றவகையில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசென் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும், சரியான நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.