இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயாகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.