
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குசால் பெரேரா மற்றும் சரித் அசலங்காவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 101 ரன்களையும், சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 37 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 69 ரன்களையும், டேரில் மிட்செல் 35 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.