
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து தொடக்காம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 34 ரன்களைச் சேர்த்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது மழை நீடித்த காரணத்தால் போட்டி தடைபட்டது. அதன்பின் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடர்ந்து பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.