Advertisement

விஜய ஹசாரே கோப்பை: வெற்றிலும் புதிய சாதனையை நிகழ்த்தியது தமிழ்நாடு!

அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய உலக சாதனையை நிகழ்த்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 21, 2022 • 20:14 PM
List Of Records Created/Broken By N Jagadeesan And Tamil Nadu In The Match Against Arunachal Pradesh
List Of Records Created/Broken By N Jagadeesan And Tamil Nadu In The Match Against Arunachal Pradesh (Image Source: Google)
Advertisement

உள்ளூரில் புகழ்பெற்ற ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடப்பாண்டு சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், வழக்கம்போல தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன், என்.ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. 50,100,150,200 என இந்த பார்ட்னர்ஷிப் தொடர்ந்து ரன்களை குவித்து வந்தது.

Trending


இறுதியில் இருவரும் அதிரடியாக சதம் கடந்ததால், 30 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 280/0 ரன்களை சேர்த்தது. இதன்பிறகும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகள் பறந்துகொண்டேதான் இருந்தது. இதற்கு ஒரு முடிவே இல்லையா என அருணாச்சல பிரதேச பந்துவீச்சாளர்கள் புலம்பும் அளவுக்கு பந்துகள் தொடர்ந்து பவுண்டரிகளை தொட்டுதொட்டு வந்தது.

இறுதியில் இரண்டு தொடக்க வீரர்களும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 277 ரன்களையும், சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 406 ரன்களை குவித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும்.

இந்த இரண்டு பேரும் ஆட்டமிழந்தப் பிறகு பாபா இந்திரஜித், பாபா அபரஜித் ஆகியோர் தலா 31 ரன்களை சேர்த்தார்கள். இதனால், தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 506/2 ரன்களை குவித்து, வரலாறு படைத்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் (498/6), மூன்றாவது இடத்தில் சர்ரே (481/4) அணியும் இருக்கிறது.

மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணியில் ஒருவர்கூட 20 ரன்களை தொடவில்லை. குறிப்பாக, மூன்று பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இதனால், அருணாச்சல பிரதசே அணி 71/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 5/12 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் உலக அளவில், ஒரு ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல்முறையாகும்.அச்சாதனையை தமிழ்நாடு அணி படைத்துள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement