
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா - கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாசிம் அம்லா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கௌதம் கம்பீர் - கிர்க் எட்வர்ட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்தனர்.
பின் 63 ரன்களில் கௌதம் கம்பீர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 59 ரன்களை எடுத்திருந்த கிர்க் எட்வர்ட்ஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பென் டங் 37 ரன்களையும், ஆஷ்லி நர்ஸ் 34 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. பில்வாரா கிங்ஸ் தரப்பில் அனுரீத் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.