
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்தது. அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இரு நாடுகளுக்கு இடைப்பட்ட தொடர்கள் நடைபெற உள்ளன.
உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள அந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், அல்ஸாரி ஜோசப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.