
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் விளாசினர். நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகக்கோப்பை தொடரில் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலிலும் 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பந்து வீச்சில் கொஞ்சம் லைனை தவறாக வீசிய தங்களது பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்கியதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார். குறிப்பாக மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு விளையாடியதாக பாராட்டும் அவர் இந்த தோல்வியில் பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.