
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகிக்கொண்டு, ஜடேஜாவை கேப்டனாக நியமித்துள்ளார். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றுள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்திவரும் தோனி, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கேவை வீரநடை போடவைத்திருக்கிறார்.
தோனியின் சிறப்பான கேப்டன்சியால் 4 முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. ஒரேயொரு சீசனை (2020) தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃபிற்கு அழைத்து சென்றவர் தோனி. மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால் தோனியோ, வலுவான கோர் அணியை கட்டமைத்து, அவர்களை சுற்றி சில வீரர்களை மட்டுமே மாற்றிக்கொண்டு வந்தார். ஆடும் லெவனிலும் பெரிதாக மாற்றங்களை செய்யாமல், தன் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்து சாதித்து காட்டியவர் தோனி.