
வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சொந்த மண்ணில் தோனியை காண உற்சாகமாக உள்ளனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், அடுத்த சீசன் தொடங்க 5 மாதங்களுக்கு முன்பு தோனி தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார். சையித் முஷ்டாக் அலி கோப்பைக்காக ஜார்க்கண்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஜார்க்கண்ட் அணியுடன் சேர்ந்துள்ள தோனி பயிற்சியை தொடங்கியிருக்கிறார். தோனி பேட்டிங் செய்யும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதலில் லேசான பயிற்சியை தொடங்க இருக்கும் தோனி பிறகு தனது பயிற்சி வீரியத்தை அதிகரிக்க உள்ளார்.