
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய 19 அணியை எதிர்த்து, அயர்லாந்து அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தியது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷினி குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதார்ஷ் சிங் 17 ரன்களிலும், அர்ஷினி குல்கர்னி 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்ன இணைந்த முஷீர் கான் - கேப்டன் உதய் சஹாரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 156 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் உதய் சஹாரன் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தினார்.