
தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக உலகின் பல முன்னணி வீரர்களை அசால்டாக வீழ்த்தினார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டி20 தொடருக்கான அணியில் இடம் பிடித்தார்.
ஆனால் காயம் காரணமாக அந்த ஆஸ்திரேலியா தொடரை தவறவிட்ட வருண் சக்ரவர்த்திக்கு இரண்டாவது வாய்ப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அப்போதும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இப்படி தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்ட வருண் சக்கரவர்த்திக்கு மூன்றாவதாக இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பான திறன் கொண்ட பந்துவீச்சாளர் என்ற காரணத்தினால் இந்திய நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது.