
அலூரில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதி வருகின்றன. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தார்கள். சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார்.
கடந்த மூன்று போட்டிகளிலும் சதமடித்த ஜெகதீசன் இன்றும் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். அவர் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4ஆவது வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.