
கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது.
அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.