
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் தற்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடியது. அதேசமயம் நியூசிலாந்து அணியும், அடுத்த மாதம் வங்கதேசம் சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதாம் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து விளையாடும் என்றும், இதில் ஒருநாள் போட்டிகள் ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், டி20 போட்டிகள் லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.