
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இதில் ஐடன் மாக்ரம் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத்தும் சோபிக்க தவறினர்.
இருப்பினும் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களைக் குவித்தது. இதையடுத்து கேகேஆர் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.