இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்விக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சதிர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர்த்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்விலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.