
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மைதான வளாகத்திற்குள் ஒரு ட்ரோன் விழுந்ததை அடுத்து அவசரக் கூட்டம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் திட்டமிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெற இருந்த மற்ற அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இத்தொடரின் எஞ்சிய போட்டிக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.