
முழங்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பேட்டர் ஃபகர் ஜமானும் உடல் தகுதி பெற்று விட்டார். ஷாஹின் ஷா அஃப்ரீடி முழங்கால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று லண்டனில் புனர் சிகிச்சையில் இருந்தார். இப்போது உடல்தகுதி பெற்றுவிட்டபடியால் அக்டோபர் 17ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி டி20 ஆட்டத்திலும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஃப்கான் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்திலும் ஷாஹின் அஃப்ரீடி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷாஹின் அஃப்ரீடி, “கடந்த 10 நாட்களாக என்னால் 6 முதல் 8 ஓவர்கள் வரை சிக்கலின்றி வீச முடிந்தது. அதுவும் முழு ரன் - அப் மற்றும் வேகத்துடன் வீச முடிந்தது. அணியுடன் இல்லாமல் இருந்த நாட்களை வெறுமையாக உணர்ந்தேன். வலையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்தாலும் உண்மையான மேட்ச் சூழ்நிலை என்பது உற்சாகமானது” என்றார்.
அதேபோல் இடது கை பேட்டர் ஃபக்கர் ஜமான் முழங்கால் காயத்திலிருந்து முழு குணமடைந்து அவரும் அணியுடன் இணையவிருக்கிறார். ஆனால், இவர் கூடுதல் வீரர்கள் பட்டியலில்தான் இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 4-3 என்று இழந்ததற்கு ஷாஹின் அஃப்ரீடி இல்லாத குறைதான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.