
முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியை போல அதிரடியை வெளிப்படுத்திய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இம்முறை பாகிஸ்தான் பவுலர்கள் சுதாரித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்.
இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பென் டக்கட் 63 ரன்களும், ஆலி போப் 60 ரன்களும் அடித்து அவுட்டாகினர். முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக தொடங்கியது. முதல் நாள் முடிவில் 107 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் பாபர் அசாம் மற்றும் சவுத் சக்கீல் இருவரும் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் அரை சதம் கடந்து 75 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் இழந்தார். நன்றாக விளையாடி வந்த சவுத் சக்கீல் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.