
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் தோல்வியைத் தவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அனால் இப்போட்டியில் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும். இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டியாகும்.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.