
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 8 ரன்களிலும், கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணை நிகோலஸ் பூரன் - ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் எடுத்திருந்த ஷாய் ஹோப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோவ்மன் பாவெலும் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 82 ரன்களிலும், இறுதியில் அதிரடி காட்டிய ரூதர்ஃபோர்ட் 29 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.