
வெஸ்ட் இண்டீஸுடனான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குல்தீப், சஹால் ஆகியோர் ஒன்றாக விளையாடுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த ரோஹித், “முந்தைய காலத்தில் சஹாலும் குல்தீப் யாதவும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடியபோது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். கூடுதல் பேட்டர், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் போன்ற அணித் தேர்வுக்காக இருவரில் ஒருவர் விளையாட முடியாமல் போனது. எனினும் சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது.
குல்தீப் யாதவை மெல்ல மெல்ல அணிக்குள் கொண்டு வர வேண்டும். அவசரம் காட்டத் தேவையில்லை. அவருடைய திறமையைக் கொண்டுவர உரிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அவரிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்கும் நிலைக்கு வரக்கூடாது. இந்தச் சூழலைக் கவனமாகக் கையாள வேண்டும். நிறைய ஆட்டங்கள் ஆடினால் குல்தீப் யாதவால் நன்குப் பந்துவீச முடியும். அதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.