
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 22 ரன்களில் முகமது ஹாரிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹசீபுல்லா கானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் கட்மோர் 24 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 12 ரன்களுக்கும், அமர் ஜமால் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.