
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கேப்டன் சௌத் ஷகீப் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்களை எட்டியது. அதன்பின் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபின் ஆலன் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சௌத் ஷகீலும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹசன் நவாஸும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 35 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 21 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்களைக் குவித்தது.