
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.