
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் நேற்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். முகமது அலி 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித்தும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார்.
அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் விக்கெட்டுகளை இழக்க, தமிழ்நாடு அணி முதல்நாள் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.