ரஞ்சி கோப்பை 2025: சச்சின் பேபி அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணிக்கு அக்சய் சந்த்ரன் - ரோஹன் குன்னுமால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சய் சந்த்ரன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 30 ரன்களில் ரோஹன் குன்னுமாலும் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read
பின்னர் களமிறங்கிய வருண் நாயனாரும் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சச்சின் பேபி மற்றும் ஜலஜ் சக்ஸேனா இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஜலஜ் சக்ஸேனா தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சச்சின் பேபி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் சச்சினுடன் ஜோடி சேர்ந்த முகமது அசாருதினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதன்மூலம் கேரளா அணி முதல்நாள் ஆட்டாநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சச்சின் பேபி 69 ரன்களுடனும், முகமது அசாரூதின் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குஜராத் தரப்பில் நாக்வஸ்வல்லா, ஜடேஜா, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now