
ரஞ்சி தொடர் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. சௌராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளும் அரையிறுதியில் விளையாடிவருகின்றன.
கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் சமர்த் (3), தேவ்தத் படிக்கல்(9), நிகின் ஜோஸ்(13), மனீஷ் பாண்டே(7), ஷ்ரேயாஸ் கோபால்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மறுமுனையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 6ஆவது விக்கெட்டுக்கு மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஷரத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷரத் 66 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். 429 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 249 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது கர்நாடகா அணி.