பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ravi Shastri, other indian coaches look at exit route after T20 World Cup in UAE (Image Source: Google)
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவி சாஸ்திரி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவிருப்பதாக ரவி சாஸ்திரி பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி - நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ரவி சாஸ்திரியும் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டுமின்றி மொத்த பயிற்சியாளர்கள் குழுவும் விலகவுள்ளது. அதில் பீல்டிங் கோச் ஸ்ரீதர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் அதிகபட்ச வயதுவரம்பு 60 வயதுவரை மட்டுமே. ரவி சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். இதன்காரணமாகவே இந்த முடிவினை ரவிசாஸ்திரி எடுத்திருப்பாகத் தெரிகிறது.
ரவிசாஸ்திரி மட்டுமின்றி புதிய பயிற்சியாளர் குழுவை நியமிக்கும் எண்ணத்தில் தான் பிசிசிஐம் இருப்பதாக தெரிகிறது. ஐசிசி கோப்பை கனவு ஒவ்வொரு முறையும் தகர்ந்து வருவதால் புத்தம் புதிய பயிற்சிக்குழுவுடன் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனவே இந்தாண்டு இறுதிக்குள் அடுத்த பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ பெறத்தொடங்கும் எனக்கூறப்படுகிறது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News