
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அந்த அணியின் பயிற்சி முகாமில் சில தினங்களுக்கு முன் இணைந்தார்.
முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியின் வெற்றியில் கோலி முக்கிய பங்கு வகித்தார். அதிலும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 100 ரன்களையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், அணியின் வெற்றிலும் பெரும் பங்கினை வகித்தார். இதன்மூலம் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 54.50 சராசரியாக 218 ரன்கள் எடுத்து, போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரராக கோலி இருந்தார்.