
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், டி20 உலக கோப்பையுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டுக்காக தன்னலமின்றி சிறப்பான பங்களிப்பு செய்த ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் என இந்திய கிரிக்கெட்டுக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்துவந்த ராகுல் டிராவிட், இளம் திறமைசாலிகள் பலரை இந்திய கிரிக்கெட்டுக்கு உருவாக்கி கொடுத்தார்.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதாவது 2023ஆம் ஆண்டுவரை ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார்.