நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. முதல் போட்டியில் நேபாள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. கடந்த 23 ஆம் தேதி முதல் இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் வீரர்களுக்கு யோ யோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெறாத ரிஷப் பந்த் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில், நேற்று அவர்களை சந்தித்து சிறிது நேரம் அவர்களுடன் கலந்து பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.