
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்க ஓவரில் நிதானம் காட்டினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் ஆர்சிபி அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களைச் சேர்த்தது.