
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. இதையடுத்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 12, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 35 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்க்க, இறுதியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களும் விளாசி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர்.