
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ராஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - ராஜத் பட்டிதார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது அறிமுக போட்டியிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சரையும் விளாசினார். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, கடந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்திருந்த சாய் சுதர்ஷன் வெறும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.