
தென் ஆப்பிரிக்காவின் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்ப்ட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்ல் நகரிலுள்ள போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாட முயற்சித்து தொடக்கம் முதலே தடுமாறினர். அதன்பின் ஜேசன் ராய் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய விஹான் லூப் 11 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டேவிட் மில்லர் - மிட்செல் வான் பியூரன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் பியூரன் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபாபியன் ஆலனும் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.