
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன், அற்புதமாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம், சாய் சுதர்ஷன் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷான் மார்ஷ் 33 இன்னிங்ஸ்களில் விளையாடி 21 முறை 30+ ஸ்கோரை பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், சாய் சுதர்ஷன் 33 இன்னிங்ஸ்களில் 24 முறை 30+ ஸ்கோரை பதிவுசெய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் மூன்றாம் இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு சுதர்ஷன் இப்போது 8 போட்டிகளில் 52.12 சராசரியுடன் 417 ரன்கள் எடுத்து, நடப்பு ஐபிஎல் தொட்ரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.