
இந்திய அணி பும்ரா தலைமையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியிலும் மூன்றாவது இடத்தில் வந்த திலக் வர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்த முறை மிகவும் பொறுப்பாக ஆரம்பத்தில் விளையாடினார். இன்னொரு முனையில் ருத்ராஜ் பார்ட்னர்ஷிப்பை கொண்டு செல்வதற்கு மட்டுமே கவனம் செலுத்தி ஆடினார்.
இந்த நிலையில் இந்த ஜோடி பத்து ஓவர்களை பொறுமையாக விளையாடி 81 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பதினொன்றாவது ஓவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் அயர்லாந்து வீரர் ஸ்டூவர்ட் லிட்டில் வீச வந்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தில் ரன் வேகத்தை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சன், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினார். அடுத்து ஒரு சிக்ஸரையும் அட்டகாசமாக நொறுக்கினார்.