
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிக் வெல்ச் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொறுப்புடன் விளையாடிய இருவரும் தங்களுடையை அரைசதங்களைக் கடந்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் நிக் வெல்ச் 54 ரன்களிலும், சீன் வில்லியம்ஸ் 67 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தஃபட்ஸ்வா சிகா 18 ரன்களுடனும், பிளெசிங் முசரபானி 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜிம்பாப்வே அணி மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.