சையித் முஷ்டாக் அலி கோப்பை: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்!
கர்நாடக அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில் சதமடித்து அசதினார்.

இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியில் பஞ்சாப் - கர்நாடகா அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி 55 பந்தில் 11 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 43 பந்தில் 59 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபினோவ் மனோகர் 62 ரன்களையும், மனிஷ் பாண்டே 45 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்தியா, அதன்பிறகு நியூசிலாந்து சென்று 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அணியில் இடம் பிடித்ததை சதம் விளாசி ஷுப்மான் கில் கொண்டாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now