
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய போது மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.
இந்த முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக சுழற் பந்துவீச்சாளர் நாதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த ஐந்து விக்கெட்டுகளின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் மறைந்த முன்னாள் ஜாம்பவானான ஷேன் வார்னேவின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை நாதன் லையன் சமன் செய்துள்ளார்.