
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தோடரில் விளையாடிவருகிறது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகமது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 08 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த பதும் நிஷங்காவும் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே - துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருகட்டத்தில் ஜனித் லியானகே 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்காவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.