
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ரோஜித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்களான ரியான் பராக், ஷிவம் தூபே மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.